கென்யாவில் சரக்கு விமானம் மோதி விபத்து; 4 பேர் பலி

நைரோபி,

கென்யா தலைநகர் நைரோபியில் ஜோமோ கென்யட்டா சர்வதேச விமான நிலையம் உள்ளது. எப்போதும் பரபரப்பாக இயங்கி வரும் இந்த விமான நிலையம், ஆப்பிரிக்கா கண்டத்தில் கிழக்கு பகுதிக்கான நுழைவாயில் என அழைக்கப்படுகிறது.

இந்த விமான நிலையத்தில் இருந்து  காலையில் சரக்கு விமானம் ஒன்று கிளம்பியது. விமானத்தில் 4 பணியாளர்கள் இருந்தனர். இந்த விமானம் கிளம்பிய சிறிது நேரத்திலேயே திடீரென அருகில் இருந்த 2 மாடி வர்த்தக கட்டிடம் ஒன்றில் மோதியது. மோதிய வேகத்தில் விமானம் வெடித்து சிதறியது. விமானத்தின் உடைந்த பாகங்கள் அருகில் இருந்து மற்ற கடைகள் மீது விழுந்தன.

இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த 4 பணியாளர்களும் உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.